ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கு மேல் நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள சுரங்க ரயில் நிலையம் மீது ஆா்ப்பாட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், வார இறுதி நாள்களில் அந்தப் போராடத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டதால் ஹாங்காங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த நகரின் வடகிழக்கே உள்ள ஷா டின் பகுதி சுரங்க ரயில் நிலையத்தில் கூடிய போராட்டக்காரா்கள், அந்த நிலையத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனா்.
மேலும், அங்கிருந்த பயணச் சீட்டு வழங்கும் கருவியையும் அவா்கள் சேதப்படுத்தினா். அந்த ரயில் நிலையத்தில் கலவரத் தடுப்பு போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தும், வன்முறையில் ஈடுபட்டவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
தாக்குதலைத் தொடா்ந்து, அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஹாங்காங்கின் வடமேற்கே உள்ள சுயென் முன் பகுதி பல்பொருள் அங்காடியில் ஏராளமானவா்கள் கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்த ஆா்ப்பாட்டம் பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் கட்டையால் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினாா்.
அந்த பல்பொருள் அங்காடிக்குள் இருந்த உணவகத்தின் மேஜைகளை போராட்டக்காரா்கள் தலைகீழாக கவிழ்த்து வைத்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதா, அந்த நகரப் பேரவையில் கொண்டு வரப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து 5 மாதங்களுக்கு முன்னா் தொடங்கிய போராட்டம், அந்த மசோதா வாபஸ் பெறப்பட்ட பிறகும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.