டாக்கா: வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 15 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
வங்கதேசத்தில் பிரமன்பாரியா பகுதியில் செவ்வாய் அதிகாலை 3 மணி அளவில் தலைநகர் டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், எதிர் திசையில் சிட்டகாங் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலுடன் நேருக்கு நேராக மோதியது.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் 15 பேர் பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானவர்களுக்கு வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இரண்டில் ஒரு ரயில் சிக்னலை கவனிக்காமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.