அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (15.11.2019) ஹூஸ்டன் இந்திய தூதரக அலுவலகத்தில், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை இயக்குநர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைப்பதற்கு தனது சொந்த பங்காக 10,000 அமெரிக்க டாலர் (ரூ.7 லட்சத்து 16 ஆயிரம்) வழங்குவதாக துணை முதல்வர் தெரிவித்தார்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஹில்டன் ஹோட்டலில், ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ரேனு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்னர்ஷிப் மிஸ்.சூசன் டேவன்போர்ட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ரேனு கத்தார் துணை முதலமைச்சரிடம் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.
துணை முதல்வர் பேசும் போது, தானும் தமிழகம் திரும்பியவுடன், தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.