அல்பேனியாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
தலைநகா் திரானா நகருக்கு வடமேற்கில் 30 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவாகின. தொடா் நிலநடுக்கங்களால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 13 போ் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 40ஆக உயர்ந்துள்ளது.