வாஷிங்டன்: சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்களின் அடுத்த முதலீட்டு இலக்கு இந்தியாவாகத்தான் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனாவை விட்டு வெளியேற நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில்தான் தனது முதலீட்டு திட்டங்களை மேற்கொள்ள விரும்புகின்றன. முதலீட்டாளர்களுக்கு உகந்த தொழில் கொள்கைகளை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. எனவேதான் அவர்கள் தாங்கள் வர்த்தகம் புரிய இந்தியாதான் மிகச் சிறந்த தேர்வு என்று கருதத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பன்னாட்டு முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுப்பதை அரசு முக்கியமானதாக கருதுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இதர நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவே பிரத்யேக திட்டம் ஒன்றை வடிமைக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அந்தத் திட்டத்துடன் முதலீட்டாளர்களை அணுகி இந்தியா ஏன் முதலீட்டுக்கு மிக விரும்பத்தக்க இடமாக உள்ளது என்பதை அவர்களிடம் விரிவாக எடுத்துரைப்பேன்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் அது முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மெய்நிகர் நாணயத்தைப் பொறுத்தவரையில் பல நாடுகள் அதனை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளன. ஏதேனும் ஒரு வழக்கில் எழும் நிச்சயமற்ற தன்மையை வைத்து திவால் சட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறனையும் பொதுவாக மதிப்பிட வேண்டிய அவசியமில்லை என்றார் அவர்.