இரண்டாம் தலைமுறை தகவல் ரிலே செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சீனாவின் திட்டத்துக்கு இந்தச் செயற்கைக்கோள் உதவும்.
இது தொடர்பாக சீன செய்தி நிறுவனம் ஒன்று திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரண்டாம் தலைமுறை தகவல் ரிலே செயற்கைக்கோளான டியான்லியானை ஞாயிற்றுக்கிழமை இரவு, சீனா விண்ணில் செலுத்தியது. சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஷிசாங் ஏவுதளத்தில் இருந்து, லாங் மார்ச்-3பி ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
சீன விண்வெளி தொழில்நுட்ப மையம் உருவாக்கிய இச்செயற்கைக்கோள், வருங்காலத்தில் அனுப்பப்படவுள்ள செயற்கைக்கோள்கள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம், ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான தகவல்களை எந்தவித இடையூறும் இன்றி பெறுவதற்கு உதவி புரியும்.
இதன் மூலம், விண்வெளி திட்டங்கள் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கவும், எளிதில் கையாளவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் முடியும். தகவல்களை விரைவாக அனுப்புவதற்கும் இச்செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.