கொலம்பியாவில் உள்ள குகுடா நகரில் வாழும் மக்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்வதற்காக, அந்நாட்டுடனான எல்லையை வெனிசூலா அதிபர் நிகோலஸ் மடூரோ திறக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ வலியுறுத்தியுள்ளார்.
தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள பெரு, சிலி, பராகுவே, கொலம்பியா ஆகிய நாடுகளில் மைக் பாம்பேயோ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதிக்கட்ட பயணமாக கொலம்பியா-வெனிசூலா எல்லைக்கு அருகே உள்ள குகுடா நகருக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குகுடா எல்லையை வெனிசூலா அதிபர் நிகோலஸ் மடூரோ திறக்க வேண்டும். அப்படித் திறந்தால், இங்குள்ள மக்களுக்கு அது மிகப் பெரும் உதவியாக இருக்கும். இங்கு வாழும் மக்களின் நிலையை நீங்கள் (மடூரோ) நேரில் பார்த்து அறிந்துகொண்டால், உங்களின் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன். வெனிசூலா மக்களுக்கு அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார் அவர்.