பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில், குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே 17 மணி நேரம் நீடித்த சண்டையில் காவல் அதிகாரி ஒருவரும் பலியானார்.
பெஷாவர் அருகேயுள்ள ஹயடாபாதில், மூன்றடுக்கு கட்டடம் ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், அந்த இடத்தை திங்கள்கிழமை இரவு சுற்றி வளைத்தனர்.
அந்த பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் நீதிபதி மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீதான தாக்குதல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், கட்டடத்தின் பிரதான சுற்றுச்சுவரை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்து பாதுகாப்பு படையினர் உள்ளே நுழைந்தனர். பயங்கரவாதிகளை சரணடைய வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் மூண்டது.
பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார். இறுதியாக செவ்வாய்க்கிழமை நண்பகலில் சண்டை முடிவுக்கு வந்தது. கட்டடத்தில் இருந்த 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி சாஹூர் அஃப்ரிடி தெரிவித்தார்.
பின்னர் நிகழ்விடத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் நிரம்பிய இரு சக்கர வாகனம் ஒன்று கண்டறியப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்தனர்.