ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்-தலிபான் அமைப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருக்கும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 250 நபர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி அரசு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஆனால், இவ்வளவு அதிகமான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்தது. எனவே, இருதரப்பினருக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாத அமைப்பு, அமெரிக்கா உள்ளிட்டவை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், ஆப்கானிஸ்தானின் 50 சதவீத பகுதிகளை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியுள்ளது. போரினால் கடந்த ஓராண்டில் மட்டும் 3,804 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.