கிறிஸ்துவ தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக இலங்கை காவல்துறை அதிகாரி 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் குண்டுவெடித்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், குண்டுவெடிப்பு குறித்து இலங்கை காவல்துறை அதிகாரி 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை காவல்துறை அதிகாரி புஜுத் ஜெயசுந்தரா 10 நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 11-ஆம் தேதி) வெளியிட்ட உளவுத்துறை எச்சரிக்கையில், "முக்கியமான தேவாலயங்கள் மற்றும் கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த தேசிய தௌஹீத் ஜமாத் (என்டிஜே) அமைப்பு திட்டமிட்டு வருவதாக வெளிநாட்டு உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், உளவுத்துறை தகவலின்படியே தற்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.