இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றான ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் டவரில், இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இந்த துக்க நிகழ்வை அனுசரிக்கும் விதமாக அதன் அனைத்து விளக்குகளும் நிறுத்தப்பட்டு ஈஃபிள் டவர் இருளில் மூழ்கியது.
முன்னதாக, 2017-ல் இங்கிலாந்திலும், 2015-ஆம் ஆண்டு பாரீஸில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலிலும் உயிரிழந்தவர்களுக்காக, ஈஃபிள் டவரில் இதேபோன்று துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.