பிரிட்டனில் 11 நாள் ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. நைஜல் இவான்ஸ் கூறியதாவது:
பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுவடைந்து வருகிறது. எனவே, அவர் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த புதிய தலைவர் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றார் அவர்.
பிரெக்ஸிட் விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல, அந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸனைப் போன்ற தலைவர்கள் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்று ஏராளமான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, தெரசா மேவுக்கு எதிராக கன்சர்வேடிவ் கட்சியினர் கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், அடுத்து ஓராண்டுக்கு அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
எனவே, இதுதொடர்பான கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து எம்.பி.க்கள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், பிரெக்ஸிட் விவகாரத்தில் தற்போது இழுபறி நீடித்து வருவதற்கு தெரசா மே போன்ற தனி நபர்கள் காரணமல்ல எனவும், பிரெக்ஸிட்டே ஒரு பிரச்னைக்குரிய விவகாரம்தான் என்று அவரது ஆதரவு எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.