இந்தியாவுக்கு அருகேயுள்ள திபெத் பீடபூமி பகுதியில் புதன்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய எல்லையையொட்டி உள்ள பகுதியில் கடலுக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 3 அலகுகளாக பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் நிங்க்சி நகரில் உள்ள மக்கள் புதன்கிழமை அதிகாலை 4. 15 மணிக்கு நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்தனர். எனினும், எவ்வித பொருள் இழப்போ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை' என்றார்.
இமயமலைத் தொடரில் உள்ள திபெத் பீடபூமி பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: நேபாளத்தில் புதன்கிழமை காலை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 2 அலகுகளாகவும், 6. 40 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது. சுமார் 4 நொடிகள் நீடித்த நிலநடுக்கத்தால், மக்கள் அனைவரும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். எனினும், எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.