வரும் 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் (76) தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் இதுதொடர்பாக ஜோ பிடென் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
விர்ஜினியாவின் சார்லட்ஸ்வில் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டிரம்ப் கருத்து வெளியிட்டபோது, இருதரப்பிலும் சில நல்ல நபர்கள் இருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அத்தகைய நபரை வெள்ளை மாளிகையில் 8 ஆண்டுகள் இருக்க அனுமதித்தால், நமது நாட்டின் அடிப்படைத் தன்மையையே மாற்றி விடுவார். இதனால் நமது நாட்டுக்குதான் ஆபத்து. ஆதலால் நமது நாட்டின் உயிரைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ஜோ பிடென்.
வரும் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் வெர்மான்ட் மாகாணத்தைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அந்த போட்டியில் தற்போது ஜோ பிடெனும் இணைந்துள்ளார். பிறருடன் ஒப்பிடுகையில், சர்வதேச மற்றும் நாடாளுமன்ற அனுபவம் அதிகம் உள்ளவர் ஜோ பிடென். அமெரிக்க அரசியலிலும் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர்.