லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வழக்கு விசாரணைக்காக காணொலிக்காட்சி மூலம் அவர் ஆஜராக உள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13, 000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதையடுத்து அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், இப்போது லண்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது 28 நாள் நீதிமன்றக் காவல் முடியவுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், காணொலிக்காட்சி வாயிலாக நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட உள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த 2 மனுக்களையும் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.