ராணுவ நடவடிக்கைக்கு முன்னோட்டம்?
ஹாங்காங் விமான நிலையத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம் பயங்கரவாத்துக்கு ஒப்பானது என்று சீனா கடுமையாகக் கூறியுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது சீனர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதைக் குறிப்பிட்டு சீனா இவ்வாறு சாடியுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங் விவகாரங்களுக்கான தேசிய கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஷு லுயிங் புதன்கிழமை கூறியதாவது: ஹாங்காங் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், சீனாவிலிருந்து வந்திருந்தவர்களை தாக்கியுள்ளனர். பயங்கரவாதத்துக்கு ஒப்பான இத்தகைய செயல்களை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் அவர்.
ஹாங்காங் போராட்டங்களை சீனா பயங்கரவாதமாகச் சித்திரிப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே, ஹாங்காங்கில் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. அத்துடன், ஹாங்காங் எல்லையை நோக்கி சீன ராணுவத்தினர் கவச வாகனங்களில் விரையும் விடியோவையும் அந்த நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டது.
இந்தச் சூழலில், விமான நிலைய சம்பவத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு சீனா பேசியுள்ளது, போராட்டங்களை அடக்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராணுவம்தலையிடலாம்
ஹாங்காங் போராட்டங்களை அடக்குவதற்கு சீன ராணுவம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஹாங்காங் எல்லையில் படைகள் குவிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஹாங்காங்கை நோக்கி ஏராளமான சீனப் படையினர் அனுப்பப்படுவதை அமெரிக்க உளவுத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நடவடிக்கையால் சீனா, ஹாங்காங் போராட்டக் குழு ஆகிய இரு தரப்பினருக்குமே எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றே விரும்புகிறேன். உயிரிழப்புகள் இன்றி, யாருக்கும் காயமின்றி இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.