பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பிராந்திய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலத்தை பிரதமர் இம்ரான் கான் நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக கமர் ஜாவேத் பாஜ்வா (58) நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையவிருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ தலைமைத் தளபதி ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடையும் தேதியில் இருந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்கும் அவரே ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், பாஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டித்து இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில், ராணுவ தலைமைத் தளபதி, பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை. ராணுவ தலைமைத் தளபதியை நியமிக்கும் அதிகாரம் அந்நாட்டுப் பிரதமரிடமே உள்ளது.