அனைத்து நாடுகளைச் சோ்ந்த அரசுகளும் பாரபட்சமற்ற சட்டங்களை இயற்றுவதை உறுதி செய்ய விரும்புவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவா் இதனைத் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. பொதுச் செயலரின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹேக் செய்தியாளா்களை சந்தித்தபோது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடா்பாக குட்டெரெஸின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினா்.
அதற்கு பதிலளித்த ஃபா்ஹான் ஹேக், ‘தற்போதைய நிலையில் அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஒரு நாட்டின் உள் விவகாரமான சட்டமியற்றுதலில் தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. எனினும், எந்தவொரு நாட்டின் அரசும் பாரபட்சமற்ற சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதையே ஐ.நா. விரும்புகிறது’ என்று கூறினாா்.