அமெரிக்காவுடன் புதிய பேச்சு நடத்துவதற்காக 14 பேர் அடங்கிய பேச்சுவார்த்தைக் குழுவை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் இறுதி செய்துள்ளனர். இக்குழுவினர் அமெரிக்க தூதர் ஷால்மே காலிஸ்தாவுடன் விரைவில் பேச்சு நடத்துவார்கள்.
தலிபான்கள் அமைத்துள்ள பேச்சுவார்த்தை குழுவுக்கு முல்லா அப்பாஸ் ஸ்டானிகாஸி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் 5 பேர் அமெரிக்காவால் குவாண்டமானோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் படை வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்த தலிபான்கள் அவர்களைப் பயன்படுத்தி தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரை அமெரிக்க சிறையில் இருந்து விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கடந்த 19 ஆண்டுகளில் முதல் முறையாக தலிபான்களுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையை தொடங்குகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாதத் தொடக்கத்தில் தெரிவித்தார். பேச்சுவார்த்தை வெற்றியடைந்து, தலிபான்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, அந்த நாட்டு அரசுடன்தான் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்தது.