வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பரோகா பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனம் ஒன்றில் 5 போலீஸார் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் புதரில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், வாகனத்தை நோக்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், வாகனத்தில் இருந்த 5 போலீஸார் மீது குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் வாகனத்திலேயே விழுந்து கிடந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டபோது 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.