புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த தருணத்தில் இந்தியாவுக்கு தங்கள் நாடு துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுட்டுரையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
எனது இனிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொடிய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, உங்கள் நாட்டுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இஸ்ரேல் எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்து கொள்கிறேன். தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது நாட்டின் சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் கண்டனம்: இதனிடையே, புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், "இந்த துயரமான தருணத்தில், இந்த கொடிய தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்திய மக்களுக்கும், உங்களுக்கும் (குடியரசுத் தலைவர், பிரதமர்), தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.