ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் கடற்படைக்கு அதிபர் ஹசன் ரெளஹானி ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணித்தார்.
இந்தக் காட்சிகள், ஈரானில் உள்ள உள்ளூர் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. கடந்த 1992-ஆம் ஆண்டில் இருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட சிறிய ரக ஆயுதங்களில் இருந்து டாங்குகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் வரை பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை ஈரான் அரசு உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஏவுகணையைத் தாங்கிச் செல்லும் நடுத்தர ரக நீர்மூழ்கிக் கப்பலை முதன் முதலாக ஈரான் அரசு தயாரித்துள்ளது. "கான்குயரர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்படும் ஏவுகணை, நிலப்பகுதியில் சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ளஇலக்கை பாய்ந்து அழிக்கும் சக்தி கொண்டதாகும். இதன் மூலம், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைக் குறிவைத்து ஈரான் கடற்படையால் தாக்குதல் நடத்த முடியும்.