ஜெய்ஷ்-ஏ-முகமது ஏற்கெனவே தடை செய்யப்பட்ட அமைப்புதான்: பாகிஸ்தான் விளக்கம்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீது தங்கள் நாட்டுச் சட்டத்துக்குள்பட்டு ஏற்கெனவே தடை அமலில் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீது தங்கள் நாட்டுச் சட்டத்துக்குள்பட்டு ஏற்கெனவே தடை அமலில் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதையடுத்து, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்பு உள்ளதாகவும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது கொள்கையாகக் கொண்டிருப்பதாகவும் இந்தியா கடுமையாகக் குற்றம் சாட்டியது.
 மேலும், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது அந்த நாடு உடனடியாக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வலியுறுத்தினார்.
 இதற்குப் பதிலளித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 பாகிஸ்தானில் கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் சட்டங்களுக்கு உள்பட்டு, அந்த அமைப்பின் மீதான தடை உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படுகின்றன. புல்வாமா தாக்குதல் நடந்த உடன், எந்தவித விசாரணையும் நடத்தாமல் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீதும், பாகிஸ்தான் மீதும் இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
 இந்தியாவில் இதற்கு முன்னர் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின்போதும் இதே போன்று அவசர குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மீது அள்ளி வீசியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பொறுப்பேற்றதாக இணையதளத்தில் வெளியான, உறுதி செய்யப்படாத விடியோவை நம்பும் இந்தியா, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக இந்திய முன்னாள் கடற்படை அதிகரி குல்பூஷண் ஜாதவ் அளித்த விடியோ வாக்குமூலத்தை நம்ப மறுப்பது ஏன்?
 புல்வாமா தாக்குதல் குறித்து முன்கூட்டியே கண்டறிய இந்திய உளவு அமைப்பு தவறியது குறித்தும், வீரர்களுக்கான பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்தும் இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார் முகமது ஃபைசல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com