இதே நிலை நீடித்தால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் பாஜக தான் வெல்லும் என ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், பொதுக்கூட்டத்தில் விரக்தியாகப் பேசினார். தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஜமா மசூதி அருகே ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பேசுகையில்,
பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து ஒரே வேட்பாளரை மட்டுமே களமிறக்க வேண்டும். ஆனால், கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சியுடன் பேசி சோர்ந்துவிட்டேன். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியால் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 இடங்களிலும் நிச்சயம் வெற்றிபெறும்.
அவ்வாறு கூட்டணி அமையாமல் காங்கிரஸ் கட்சி தனது வாக்குகளை பத்திரப்படுத்த நினைத்தால், தில்லியின் 7 இடங்களிலும் பாஜக நிச்சயம் வெல்லும். காங்கிரஸ் என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை.
இந்திய ஜனநாயகத்தை படுகொலை செய்ய கடந்த 70 ஆண்டுகளாக முயற்சிக்கும் பாகிஸ்தான் நோக்கத்தை கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிறைவேற்றி வருகின்றனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் என்பதைவிட மோடி மற்றும் அமித் ஷாவை விரட்டுவது தான் மிக முக்கியம்.
நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் யாராக இருந்தாலும், வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது எந்த விலை கொடுத்தும் மோடி, அமித் ஷா ஆகியோரை வீழ்த்த வேண்டும் என்று அலுத்துக்கொண்டார்.