சிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்: துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்: துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை


சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும் துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை மிக பிரபலம் அடையாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர்.
அவர்களது அதிவேக முன்னேற்றத்தாலும், கொடூரமான போர் முறையாலும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பலம் அதிகரித்தது. 
இந்த நிலையில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையிரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன.
ஐ.எஸ்.ஸுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வந்தனர். 
இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். 
சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, அதிபர் அல்-அஸாதின் அரசுக்கும், ரஷியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கும் சாதகமாக அமையும் என்று பலர் எச்சரித்தனர்.
எனினும், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பது மட்டுமே அமெரிக்காவின் நோக்கம் எனவும், அங்கு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர தாங்கள் முயலவில்லை என வெள்ளை மாளிகை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த அளவுக்கு அழிவைச் சந்தித்திருப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், சிரியாவிலுள்ள குர்துப் படையினர்.
அமெரிக்காவின் ராணுவ உதவியுடன் கொடூரமான ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக இவர்கள் நடத்திய போராட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்துள்ளனர்.
இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் பெரும்பாலான அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டனர்.
இப்போது அங்கிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவது, குர்துப் படையினரை நிர்க்கதியாக தவிக்கவிட்டு செல்வதற்கு சமம் என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன. 
சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, குர்துப் படையினரை துருக்கி ராணுவம் வேட்டையாடும். 
அங்கு ஒரு ரத்தக் களறியான புதிய யுத்தம் ஆரம்பம் ஆகும் என்று குர்து விவகாரங்களில் தேர்ச்சி பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான், துருக்கிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். துருக்கி அதுபோன்ற தாக்குதல்களை தொடுக்கும்பட்சத்தில் அமெரிக்க அந்த நாட்டின் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை அமல்படுத்த தயாராக உள்ளது என்பதை டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com