கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் நட்சத்திர விடுதியொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
சோமாலியாவின் தெற்கே அமைந்துள்ள துறைமுக நகரான கிஸ்மயோவில் புகழ்பெற்ற மெதீனா நட்சத்திர விடுதி அமைந்துள்ளது.
அந்த விடுதி அமைந்துள்ள பகுதிக்கு வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை வெள்ளிக்கிழமை ஓட்டி வந்த பயங்கரவாதி, அதனை விடுதி வாயிலில் மோதி வெடிக்கச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மேலும் பல பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டவாறே அந்த விடுதிக்குள் நுழைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பாதுகாப்புப் படையினர் அந்த விடுதியை சுற்றிவளைத்தனர். அதையடுத்து அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை சுமார் 12 மணி நேரத்துக்கு நீடித்து சனிக்கிழமைதான் முடிவுக்கு வந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் கென்யாவையும், 3 பேர் தான்ஸானியாவையும் சேர்ந்தவர்கள்.
இதுதவிர, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு சீனர்கள் உள்பட 56 பேர் காயமடைந்தனர்.
தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதியைத் தவிர, 4 பயங்கரவாதிகள் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
அந்த பயங்கரவாதிகளில் ஒருவர் சோமாலிய காவல்துறை சீருடையை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தற்போது அந்த நட்சத்திர விடுதி பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அல்-ஷபாப் பொறுப்பேற்பு
மெதீனா நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சோமாலிய அரசுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் அந்த அல்-காய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பு, இதே போன்ற பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.