கடந்த 8 ஆண்டுகளில் ஹெச்ஐவி வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, எய்ட்ஸ் நோய் தொடர்பான விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐ.நா. பிரிவான யுஎன்எய்ட்ஸ்' வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஹெச்ஐவி வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 2018-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 7.7 லட்சம் பேர் இறந்தனர்.
இது, கடந்த 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவீதம் குறைவாகும்.
தற்போது உலகம் முழுவதும் 3.79 கோடி பேர் ஹெச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சாதனை அளவாக அவர்களில் 2.3 கோடி பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே ஹெச்ஐவி உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
எனினும், இந்த திட்டங்களுக்கான நிதி வேகமாக குறைந்து வருவதால், எய்ட்ஸ் நோயை முற்றிலுமாக ஒழிக்கும் சர்வதேச முயற்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.