இலங்கையில் பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, ஈஸ்டர் பண்டிகையின்போது, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக முன்கூட்டியே உளவுத் துறை தகவல்கள் கிடைத்தும், இந்தத் தாக்குதலை தடுக்க அரசு தவறி விட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் நிலவிய குறைபாடுகளுக்காக, பாதுகாப்புத் துறை தலைவர் மற்றும் காவல் துறை தலைமை அதிகாரி ஆகியோர் பதவி விலகினர்.
இந்நிலையில், பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்று விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 3 மாதங்கள் ஆகிவிட்டன. நாட்டில் நிகழ்ந்த மோசமான சம்பவம் இதுதான். நம் நாடு உருக்குலைந்து விடும் என்று அனைவரும் நினைத்தார்கள். மக்கள் அனைவரும் அச்சத்தில் இருந்தனர். அதனால்தான், முதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கைது செய்தோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, நமது நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இதுநாள் வரை விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து நமக்கு அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால் தற்போது நிலை வேறுவிதமாக உள்ளது. தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதால் மட்டும் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடாது. நாட்டில் ஏற்கெனவே உள்ள பாதுகாப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
இங்கிலாந்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களில், 2001-19 ஆம் ஆண்டுக்குள் 15 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோல, நமது நாட்டு சட்டங்களிலும் நிறைய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். புதிய சட்டங்கள் இயற்றுவதற்கு தேவையான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடமையைச் செய்ய தவறியதற்காக பாதுகாப்புத் துறை தலைவர் மற்றும் காவல் துறை தலைமை அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.