ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் இலங்கை வந்து சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தையும், மதவெறி வன்முறையையும் முழு பலத்துடன் எதிர்கொள்ள இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
அதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கை தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் செயல்பட்டு வந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, மதவாத அமைப்புகள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.