விக்கிலீக்ஸ் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் வியாழக்கிழமை உறுதி செய்தார்.
இதுதொடர்பாக அவர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அசாஞ்சே தற்போது சிறையில் உள்ளார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாடு கோரிக்கை விடுத்துள்ள வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆனால், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஆவணங்களில் நான் புதன்கிழமையே கையெழுத்திட்டுவிட்டேன். அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்நாடு விடுத்துள்ள கோரிக்கை, அதற்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஆராய்ந்து, அதன் மீது பிரிட்டன் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடிவெடுக்கும். உள்துறைச் செயலர் என்ற முறையில் இந்த வழக்கில் நீதி வழங்கப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.
அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்தக் கோரி அந்நாட்டிடம் இருந்து, பிரிட்டனுக்கு முறையான கோரிக்கை வந்துள்ளது. எனவே, அதற்கான ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுள்ளேன். ஆனால், இதில் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும் என்று பிரிட்டன் உள்துறைச் செயலர் சஜித் ஜாவித் கூறினார்.