அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவி சாரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
பிரதமரின் இல்லத்தில் சமையல்காரர் ஒருவர் பணியாற்றி வந்த நிலையில், அரசு செலவில் வெளியிலிருந்து உணவு வரவழைத்ததன் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் சாரா நெதன்யாகு மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஜெருசலேம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஏவிட்டல் சென், சாரா மீதான குற்றச்சாட்டை ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார்.
அந்தக் குற்றத்துக்கு தண்டனையாக 10,000 ஷெகல் (சுமார் ரூ.1.9 லட்சம்) அபராதம் விதித்துடன், முறைகேடாகப் பயன்படுத்திய 45,000 ஷெகலை (சுமார் ரூ.8.7 லட்சம்) அரசுக்கே திருப்பியளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
சாரா நெதன்யாகுவின் வேண்டுகோளை ஏற்று, 45,000 ஷெகலை அவர் 9 தவணைகளாக செலுத்தவும் நீதிபதி சம்மதித்தார்.