நியூஸிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் கெர்மாடெக் தீவுகளுக்கு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவானது.
தாரங்கா நகருக்கு 928 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. கடல்மட்டத்துக்கும் மேல் உயர்ந்த எரிமலைகளால் ஆன கெர்மாடெக் தீவுகளில் பொதுமக்கள் வசிப்பதில்லை எனவும், அந்த எரிமலைகளால் 7 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் அந்தப் பகுதியில் அவ்வப்போது ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.