ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை சீன ராணுவம் வெற்றிகரமாக திங்கள்கிழமை சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து சீன அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகமும், சீன வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த விமானம், கான்சு மாகாணத்திலுள்ள ஜாங்க்யி பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
அந்த விமானத்தில் ராணுவ உபகரணங்கள் ஏற்றி அனுப்பப்பட்டன. அந்த விமானமும் ஏற்கெனவெ நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அந்த உபகரணங்களை வெற்றிகரமாக தரையிறக்கியது.
ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானம் மூலம், 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தில் 500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள பொருள்களை தரையிறக்கியது இதுதான் முதல்முறையாகும். அதுமட்டுமன்றி, இந்த ரக விமானத்தை சோதனை நடத்தியதன்மூலம், அதிக எடை கொண்ட பொருள்களை எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கும் வசதியுடைய ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது என்றார்.