பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சதார் காலமானார். அவருக்கு வயது 88.
பாகிஸ்தான் அதிபரான முஷாரப் பதவி வகித்த காலத்தில், இந்தியாவின் ஆக்ரா நகரில் இருநாடுகளிடையேயான உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது முஷாரப்புடன் அப்துல் சதாரும் ஆக்ரா வந்திருந்தார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருமுறை அவர் பதவி வகித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரியா, முன்னாள் சோவியத் யூனியன் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பாகிஸ்தான் தூதராகவும் அவர் இருந்துள்ளார். 1986ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகவும் பதவி வகித்துள்ளார். எழுத்தாளராகவும் விளங்கிய சதார், பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக புத்தகமும் எழுதியுள்ளார்.
அவரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அப்துல் சதாரின் மறைவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.