துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரைத் திருமணம் செய்யவிருந்த ஹாடிஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: துருக்கியிலுள்ள தங்களது தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சவூதி அரேபியா கூறி வருகிறது. எனினும், அந்த விசாரணை நம்பகத்தன்மை அற்றது ஆகும். எனவே, இந்த விவகாரம் குறித்து நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசர தேவையாகும் என்றார் அவர்.
முன்னதாக, கஷோகி படுகொலையில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஆக்னஸ் கலாமர்ட் தெரிவித்துள்ள நிலையில் ஹாடிஸ் செங்கிஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கியைச் சேர்ந்த ஹாடிஸ் செங்கிஸை திருமணம் செய்துகொள்வதற்குத் தேவையான சில ஆவணங்களைப் பெறுவதற்காக அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கஷோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேதி சென்றார்.
எனினும், அங்கு அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.