நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும், மற்றொரு நபரை கைது செய்திருப்பதாகவும் நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டறிந்த நியூஸிலாந்து ராணுவம், அவற்றைச் செயலிழக்கச் செய்தது.
இந்நிலையில், பிரெண்டன் ஹாரிஸன் டர்ரன்ட் (28) என்பவரை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நியூஸிலாந்து போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். குற்றவாளி ஹாரிஸன் எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் கிடையாது எனவும், டுனைடனில் வசிக்கும் ஆஸ்திரேலிய குடிமகன் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கிறைஸ்ட்சர்ச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நீதிமன்ற விசாரணையின் போது ஹாரிஸன் எதையும் பேசாமல் மௌனமாக பார்வையாளர்களை பார்த்தவாறு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளியின் ஜாமின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் ஹாரிஸனுக்கு மரண தண்டனை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக நீதிபதி கெல்லர் குறிப்பிட்டுள்ளார்.