அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு தொடர்ந்து மேன்மையுறும் என்று அமெரிக்க தூதரக அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே மூன்று நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவை சந்தித்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய கோகலே, இறுதியாக வெள்ளிக்கிழமை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதரக அதிகாரி கூறும்போது:
ஜான் போல்டன் உடனான சந்திப்பின்போது இருதரப்பு உறவில் செய்யப்படவேண்டிய அத்தியவசியமான மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவை மேன்மையுறச் செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கிடையிலான நலன்கள் பரந்த முறையில் சீரமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டவை மற்றும் ஆழமானவை. இந்தோ-பசிஃபிக் விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு ஒரே மாதிரியானவை. எனவே பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. மேலும், வளர்ந்து வரும் அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது என்றார் அவர்.