மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தினர்.
மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
முகமது சோலி தலைமையிலான அரசு மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இந்நிலையில், இரு நாள் பயணமாக மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட சுஷ்மா, அதிபர் சோலியை திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் காசிம் இம்ராஹிம், உள்துறை அமைச்சர் ஷேக் இம்ரான் அப்துல்லா ஆகியோரையும் சுஷ்மா சந்திக்க இருக்கிறார்.