பிரேசில் முன்னாள் அதிபர் சிறையிலிருந்து விடுவிப்பு
பிரேசில் முன்னாள் அதிபர் மிஷெல் டெமெர் (78) , சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மிஷெல் டெமெர், பணமோசடியில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட அவர், தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, ஊழல் இல்லாத நாடாக பிரேசில் திகழ வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், ஊழலை ஒழிக்கப் போதுமான உத்தரவாதம் இல்லாதபோது, நாட்டில் ஊழலை ஒழிப்பது கடினமே. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பினும், அவரைத் தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறையிலிருந்து மிஷெல் விடுவிக்கப்பட்டார். எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.