தங்களது சமூக வலைதளத்தில் நேரடியாக விடியோ ஒளிபரப்பு செய்யும் வசதியைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை முகநூல் அறிவித்துள்ளது.
நியூஸிலாந்து மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நேரலையாக முகநூலில் ஒளிபரப்பப்பட்டதால் எழுந்த சர்ச்சையையடுத்து, அந்த வலைதள நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன துணைத் தலைவர் கய் ரோஸன் கூறியதாவது:
நியூஸாந்து சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவும், மக்களிடையே வெறுப்பை பரப்பவும் எங்களது சேவைகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, இந்த வகையான நேரலை பதிவுகளை வெளியிடுவோர், அந்தப் பதிவுகளை பகிர்வோர் போன்றோரின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்.
இந்தக் கட்டுப்பாட்டை பிற முகநூல் சேவைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.