காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே தொடந்து பல்வேறு பகுதிகளில் யுத்தம் நடைபெற்று வருகிறது இதில் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் எப்போது உதவியைக் கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க மற்றும் கூட்டணி நாடுகளின் படைகள் தாக்குதலுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான்களுக்கு எதிராக அரச படைகள் யுத்தம் நிகழ்த்தி வந்தன. அப்போது வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் இத்தாக்குதலில் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று தாலிபான் தரப்பு உட்பட அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தஒரு விளக்கமும் தரப்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.