கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டில் வறட்சி நிலவுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இந்த பருவ காலத்தின் முதல் 5 மாதங்களில் நாடு முழுவதும் சராசரியாக 54.4 மி.மீ. மழையே பெய்துள்ளது. இது, கடந்த 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த மழை
அளவாகும். அந்த ஆண்டில் வட கொரியாவில் சராசரியாக 51.2 மி.மீ. மழை பெய்திருந்தது.
மழையின் அளவு மிகவும் குறைந்ததால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, வட கொரியாவுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்த ஐ.நா. குழுவினர், அந்த நாட்டில் விளைச்சல் குறைந்துள்ளதால் மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஏற்கெனவே, தங்களுக்கு உடனடியாக உணவுப் பொருள் வழங்கி உதவ வேண்டும் என்று ஐ.நா.வில் வட கொரிய தூதர் கிம் சாங் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.