கொழும்பு: இலங்கை தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் கடந்த மாதம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மாதம் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புடன் முகமது அட்டு உல் மற்றும் அஜிபுல் ஜாபர் ஆகிய இருவர் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்டம், ஒரவ்பொதன பகுதியைச் சேர்ந்த அவர்கள், அந்தப் பகுதியில் இயங்கி வரும் பள்ளியின் முதல்வர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். அந்த இருவருக்கும் ஈஸ்டர் பண்டிகையின்போது ஷாங்க்ரி-லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய முகமது சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பு இருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தின்போது, 3 தேவாலயங்களிலும், 3 நட்சத்திர விடுதிகளிலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 70 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.