சிட்னி: ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றதாக பூர்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதையடுத்து, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஆஸ்திரேலியாவின் 46-ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தற்போது ஆட்சி செலுத்தி வரும் பிரதமர் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான லேபர் கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது. சுமார் 1.6 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தலின் தொடக்கத்தில், எதிர்க்கட்சிக் கூட்டணி முன்னணியில் இருப்பதாக வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன. எனினும், பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆளும் கூட்டணி முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, மீண்டும் ஸ்காட் மோரிஸன் தலைமையிலான ஆட்சி அமையும் சூழல் உருவானது. அதையடுத்து, தோல்வியை ஏற்பதாக தொழிலாளர் கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும், கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சியால் அடுத்த ஆட்சியை அமைக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. தேசிய நலன் கருதி, பிரதமர் ஸ்காட் மோரிஸனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன்' என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சிட்னி நகரில் தனது ஆதரவாளர்களிடையே உற்சாகமாக உரையாற்றிய பிரதமர் மோரிஸன், தங்களது கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.