தஜிகிஸ்தானில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைக் காவலர்கள் மூன்று பேர் உள்பட 32 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் துஷான்பேவுக்கு கிழக்கே 17 கி.மீ. தொலைவில் இருக்கும் வாக்தத் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் உள்ளிட்ட 1,500 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கைதிகளுக்கிடையே கலவரம் மூண்டது. ஐஎஸ் கைதிகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று பாதுகாப்பு படை அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், சிறைச்சாலை வளாகத்திலிருந்த மருத்துவமனைக்கு தீ வைத்ததுடன் இன்னும் சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
இதையடுத்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையில் 29 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது பணயமாகப் பிடித்து வைக்கப்பட்ட கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதுடன், சிறையில் அமைதி திரும்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.