பிரிட்டன்: புதிய பிரதமர் பதவிக்கு போட்டா போட்டி
பிரெக்ஸிட் விவகாரத்தால் பிரிட்டன் பிரதமர் பதவியை தெரசா மே ராஜிநாமா செய்வதையடுத்து, காலியாகும் அந்தப் பதவிக்கு ஆளும் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, தனது பதவியை அடுத்த மாதம் 7-ஆம் தேதி ராஜிநாமா செய்வதாக பிரதமர் தெரசா மே வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இதுவரை 8 எம்.பி.க்கள் முன் வந்துள்ளனர்.
அவர்களில், பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னின்று நடத்திய வெளியுறவுத் துறை முன்னாள்
அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் அடுத்த பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.
எனினும், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ரோரி ஸ்டூவர்ட், சுகாதாரத் துறை அமைச்சர் மாத்யு ஹான்காக், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைக்கேல் கோவ், பிரெக்ஸிட் விவகார முன்னாள் அமைச்சர் டோமினிக் ராப், ஓய்வூதியத் துறை முன்னாள் அமைச்சர் எஸ்தெர் மெக்வி, நாடாளுமன்றத்துக்கான முன்னாள் அரசுப் பிரதிநிதி ஆண்ட்ரியா லெட்ஸம் உள்ளிட்ட மேலும் 7 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தெரசா மே பதவி விலகலுக்குப் பிறகு, அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கவிருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.