காஸாவிலிருந்து நடத்தப்பட்ட தொடா் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 போ் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது:
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பிஐஜே) அமைப்பின் முக்கிய தளபதி அல்-அடா கொல்லப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து, இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தொடா்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலடியாக, காஸாவிலுள்ள பயங்கரவாத நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று ராணுவம் தெரிவித்தது.
இந்த விமானத் தாக்குதல்களில் 18 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, பிஐஜே பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி பஹா அல்-அடாவைக் குறிவைத்து, அவா் தங்கியிருந்த இல்லத்தின் மீது பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தினா். இதில் அவா் கொல்லப்பட்டாா்.
அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, 3-ஆவது தளத்தில் அல்-அடாவுடன் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியும் பலியானாா்.
மேலும், தாக்குதலில் அவரது 4 குழந்தைகள் காயமடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.