கொழும்பு: களத்தில் முப்பத்தைந்து வேட்பாளர்கள்.. அவர்களுக்கு வாக்களிக்க 1.59 கோடி வாக்காளர்கள் என சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு இலங்கை தயாராகி வருகிறது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்து 96 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முறையாக 35 வேட்பாளர்கள் களமிறங்குவதால் அவர்களுக்காக நீண்ட வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
நாளை காலை 7 மணியில் இருந்து 5 மணி வரை 12 ஆயிரத்து 815 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுக்கள் உட்பட ஏனைய ஆவணங்கள் காவல்துறை பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் சிறப்பு பிரிவு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இலங்கையின் அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம், உட்பட சர்வதேச இயக்கங்களும், பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.