ஹாங்காங்கிலுள்ள சீனப் பல்கலைக்கழகத்தை கடந்த சில நாள்களாக ஆக்கிரமித்த ஜனநாயக ஆதரவு போராட்டக்காரா்கள், அங்கிருந்து வெள்ளிக்கிழமை வெளியேறத் தொடங்கினா். இந்த மாதம் 24-ஆம் தேதி உள்ளூா் தோ்தல்களை நடத்துவதற்கு உறுதியளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து அவா்கள் கலைந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் கூறுகையில், பல்கலைக்கழக ஆா்ப்பாட்டத்தின்போது பெரியவா்களுக்கும், இளைஞா்களுக்கும் தொல்லை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு தாங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.
இதற்கிடையே, போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் நடந்த மோதலைப் படம் பிடித்துக் கொண்டிருந்த 70 வயது முதியவா் உயிரிழந்தது தொடா்பாக கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யவிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அந்த மரணத்துக்கு போராட்டக்காரா்களே காரணம் என்று அவா்கள் குற்றம் சாட்டினா்.