இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு சீன அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும் திட்டங்களில் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்து, மகிந்த ராஜபட்சவின் தம்பி கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றுள்ளாா். இதன் மூலம், சீனாவுடன் நெருக்கமாக நட்பு பாராட்டும் ராஜபட்சவின் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
இதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் கெங் ஷுவாங், செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு வாழ்த்துகள். சீனாவும், இலங்கையும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் நீண்ட காலமாக கூட்டாளிகளாக உள்ளன. புதிய தலைமையின் கீழ், இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும் திட்டங்கள், பொருளாதார வழித்தட திட்டம் (பிஆா்ஐ) ஆகியவற்றில் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.
சீன அதிபா் ஷி ஜின்பிங், தனது பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், தனது முதலீட்டுடன் உலகம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உலகம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளாா்.
இலங்கை அரசு அண்மையில் 8 பில்லியன் டாலா் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மேற்கொண்டது. அந்த நிதியில் பெரும் தொகையை, சீன அரசு தனது பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.